கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட நாவலடி பிரதான வீதியோரம் அமைந்துள்ள பாலக்காட்டு வெட்டை குளத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தையும் அதனை அண்மித்த பகுதியையும் சிலர் நாசப்படுத்திச் செல்கின்றனர்.
இக் குளத்தில் வாகனங்களை கழுவுவதால் அதிலிருந்து வெளியேறும் எண்ணெய் குளத்தில் கலப்பதினால் நீர் மாசடைகின்றது.
அத்துடன், குளத்திலும் அதனை அண்மித்துள்ள பகுதியிலும் கழிவுப் பொருட்கள், மிருகங்களின் எச்சங்கள் போன்றவற்றை கொட்டிச் செல்வதினால் அப் பகுதி துர்நாற்றம் வீசும் பகுதியாகவும் மாறியுள்ளது.
அதனை தடுத்து நிறுத்தி குளத்தை பாதுகாக்க எமது பிரதேச சபையின் ஏற்பாட்டில் குளப் பகுதி சிரமதானம் செய்யப்பட்டுள்ளதுடன் குளத்தை நாசப்படுத்தும் நபர்களை கண்காணிக்க அப்பகுதியில் சீ.சீ.ரீ.வி கெமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இதனை மீறிச் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தவிசாளம் ஏ.எம்.நௌபர் மேலும் தெரிவித்தார்.
No comments: