News Just In

4/30/2021 01:01:00 PM

விளையாட்டினால் நல்ல எதிர்காலத்தை உருவாக்கலாம்- மருதமுனையின் முன்னாள் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர்!!


(றாசிக் நபாயிஸ்)
மருதமுனை பிறைட் பியுசர் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டு கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு கழகத்தின் தலைலர்  எம்.ஐ.எம்.றிஷாப்யின் நெறிப்படுத்தலில் கழக அணித்தலைவர் எம்.எம்.எம்.முஸ்தாக்கின் தலைமையில் மருதமுனையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு சிறப்பதிதியாக அழைக்கப்பட்ட மருதமுனையின் முன்னாள் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவரும் பிறிஸ்பேன் கிரிக்கெட்
கழகத்தின் ஸ்தாபகரும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பதிவாளருமான எம்.எப்.ஹிபத்துல் கரீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் ஹிபத்துல் கரீம் வீரர்கள் மத்தியில் உரையாற்றுகையில்,
மருதமுனையில் கிரிக்கெட் ஆட்டங்கள் 1970களில் இருந்து தனிப்பட்ட பலர் சேர்ந்து மென்பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் கழக அமைப்பு ரீதியாக 1980களின் பின்னரான காலத்தில் இருந்தே இதில் அதிக ஈடுபாடு காட்டத் தொடங்கினர். அதன் பின்னரே அதிகமான கழகங்கள் உருவாக்கப்பட்டன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல சுற்றி போட்டிகளையும், சவால் கிண்ணங்களையும் நடாத்தி வந்தனர். இதனால் ரசிகர்களும் இதற்கு அதிகமாயினர் அதன் பேறாக கிரிக்கெட் விளையாட்டு ஒரு பெரும் துறையாக மருதமுனையில் மேலோங்கிக் காணப்பட்டது.

ஆனாலும் அது வரைகாலமும் கிரிக்கெட் கடின பந்தாட்டமாக மாற்றம் பெறாமல் இருந்தது ஒரு பெரும் குறைபாடாகவே இருந்து வர 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் சில இளைஞர்கள்
கடின பந்தாட்டத்தை ஆரம்பித்து பல ஆண்டுகள் விளையாடி வந்தார்கள். இருந்தும் அதனை அவர்களால் தொடர முடியாமல் போகவே மென்பந்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு அதற்கென மருதமுனை கிரிக்கெட் கட்டுப்பாடுச் சபையும் உருவாக்கப்பட்டு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில் மறைந்து போயுள்ள
கடின பந்தாட்டத்தை மீண்டும் கட்டியொழுப்ப மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு தொகுதியின் கிழக்கு பக்கமாக மையவாடிப் பக்க மூலையில் கடின பந்தாட்டம் ஆடுகள தொகுதி ஒன்றை அமைப்பதற்கு விளையாட்டு அமைச்சின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சிபான் மஹ்றூப்பிடம் இது சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்தார்.

ஆகவே இக்கழகத்தை முதலில் அம்பாறை மாவட்ட கடின பந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்வதுடன் வீரர்களை தொடர்ச்சியாக பயிற்சியில் வைத்துக் கொள்ள வேண்டும். 11 வீரர்கள் விளையாடினாலும் ஏனைய வீரர்களும் தங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். இலங்கை அணி 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை சுவிகரித்ததும் வீரர்களின் முழுமையான ஒத்துழைப்பும், விடா முயற்சியுமே. அது போன்று நாங்களும் இருக்க வேண்டும்.

கிரிக்கெட் தனிநபர் விளையாட்டு அல்ல எல்லோரும் சேர்ந்து விளையாட வேண்டும். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். உங்களுக்கு பின்னர் உங்களது சந்ததியினர் விளையாட வேண்டும். அதற்கு நீங்கள் வழிசமைத்து கொடுக்க வேண்டும். உதைப்பந்து விளையாடத் தெரியாதவர்கள் கூட உதைபந்தாட்டந்தை கொண்டு செல்லுகிறார்கள். முயற்சி இருந்தால் எதையும் ஜெயிக்க முடியும்.

வடகிழக்கில் கடின பந்தாட தகுதியான வீரர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் இலங்கையின் கிரிக்கெட் ஏ கழகத்தை வெற்றி கொள்ள முடியும். இதற்காக களத்தை நாங்கள் உருவாக்க வேண்டும். "விளையாட்டினால் நல்ல எதிர்காலத்தை உருவாக்கலாம்" இதற்காக நாங்கள் ஒருமித்து பயணம் செய்ய வேண்டும். என வேண்டிக் கொண்டார்.

No comments: