News Just In

3/11/2021 01:38:00 PM

தற்போதைய காத்தான்குடி பிரதேச செயலகத்தை மீள் நிர்ணயம் செய்து இரண்டு பிரிவுகளாக உருவாக்கவும் புதிய கிராம அலுவலர் பிரிவுகளை உருவாக்கவும் முன்மொழிவு!!


தற்போதிருக்கும் காத்தான்குடி பிரதேச செயலக நிருவாகப் பிரிவை மீள் நிர்ணயம் செய்து அதனை இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளாக உருவாக்குவதற்கும் மேலும் புதிய கிராம அலுவலர் பிரிவுகளை உருவாக்கவும் முன்மொழியப்பட்டுள்ளதாக பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே பிரேரிக்கப்பட்டுள்ள இந்த யோசனையை தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு ஆலோசனைக் குழுவின் தலைவருமான நஸீர் அஹமட்டிடம் இந்த முன்மொழிவு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாக 71 பள்ளிவாசல்களையும் 145 முஸ்லிம் நிறுவனங்களையும் உள்ளடக்கிய காத்தான்குடி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய காத்தான்குடி பிரதேச மக்கள் தொகை விநியோகம் இப்பகுதியின் புவியியல் மற்றும் தற்போதுள்ள நிர்வாக அமைப்பு ஆகியவற்றை கவனமாக ஆய்வு செய்து ஆராய்ந்த பின்னர் இந்த முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கிராம அலுவலர் பிரிவுகளையும் சன அடர்த்திக்கேற்ப அதிகரிக்க வேண்டும் என்றும் சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது.

மக்களின் குரலாக இருக்கும் தங்களது சம்மேளனம் அரசாங்கத் துறைகள் உள்ளாட்சி அமைப்புகள் தேசிய மற்றும் உள்ளுர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நாட்டில் உள்ள இராஜதந்திர பணிகள் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

எனவே காத்தான்குடியில் மேலும் பல கிராம அலுவலர் பிரிவுகள் உருவாக்கப்படுவதுடன் வேறு பிரதேச செயலகப் பிரிவுகளின் கீழ் வரும் கிராம அலுவலர் பிரிவுகளையும் இணைத்து இன்னுமாரு பிரதேச செயலகம் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் எனும் மக்களின் வேண்டுகோளை கரிசனையுடன் அணுகுமாறு அந்த சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)





No comments: