News Just In

3/14/2021 03:26:00 PM

ஆத்மீகத்திலிருந்து அரசியலை வேறாக்குவது, மலரிலிருந்து நறுமணத்தை பிரிப்பது போன்றது; அக்கறைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளன தலைவர் சபீஸ்!!


ஆத்மீகத்தை அரசியலிருந்து பிரிப்பது மலரிலிருந்து நறுமணத்தைப் பிரிப்பது போன்று முடியாத காரியமென, அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் கடந்த ஞாயிறன்று (13) நடைபெற்ற ஸஹீஹுல் புஹாரி தமாம் வைபவத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, 64 வருடங்களாக ஸஹீஹுல் புஹாரி கிரந்தம் ஓதப்பட்டு வருகிறது.சுமார் ஆறு இலட்சம் ஹதீதுகளைத் திரட்டிய இமாம் புஹாரி அவர்கள், சுமார் 7563 ஹதீதுகளை நூலாகத் தொகுத்தார். நபியவர்களின் வாக்கு, வாழ்க்கை, முன்மாதிரிகள் தான் ஹதீதுகளாக, அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்ற உதவுகிறது.

புனித குர்ஆனுக்கு அடுத்தபடியாக, ஹஹீஹுல் புகாரி கிரந்தத்தை மதிக்கிறோம். ஜும்ஆ பிரசங்கங்கள் சுருக்கமாக இருப்பதால் எல்லாவற்றை யும் சொல்ல முடியாதுள்ளது. இவ்வாறான ஹதீஸ் மஜ்லிஸ்கள்தான், முழுமையான விளக்கத்தைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. எனவே, இவ்வாறான மஜ்லிஸ்களை ஏற்பாடு செய்த எமது முன்னோர்களை, இந்த உயரிய சபையில் ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

பள்ளிவாசல்களில் கடமையாற்றிய முஅத்தின்கள், இமாம்கள் மற்றும் கடமையாற்றிய பெரியவர்களையும் கௌரவிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை "இன்ஷாஅல்லாஹ்" செய்யவுள்ளோம்.

தனியே மார்க்க விடயங்களை மாத்திரமன்றி சமூகப் பணிகளையும் செய்வதுதான், மஸ்ஜித்களின் கடமையாக வேண்டும். நபியவர்களின் காலந்தொட்டு, பள்ளிவாசல்கள் தான் சமூகத்தை வழிநடத்தின. சிறந்த அரசியல் தலைமைகளும் பள்ளிவாசல்களிலே, புடம்போடப்பட்டன. அரசியலையும், ஆத்மீகத்தையும் பிரிக்க முடியாதென்பது இதிலிருந்து புலப்படுகிறது.

இந்நிலைமைகள் பின்னர் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புக்களால் மாற்றமடைந்தன. இதனால்,தலைமைகளைப் புடம்போடும் நல்ல சந்தர்ப்பங்கள் இல்லாமலாகியது.

தன்னைப் பொறுத்தவரை சிறந்த சமூக மற்றும் அரசியல் தலைமைகளுக்கான பாடசாலைகளாகவே பள்ளிவாசல்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய அக்கரைப்பற்று ஜெம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர், இளம் தலைமைகள் பள்ளிவாசல்களைப் பொறுப்பேற்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் இருபது வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற, புகாரி மஜ்லிஸ் நினைவுகள், தம்மை ஆட்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

(நூருள் ஹுதா உமர்)

No comments: