News Just In

2/18/2021 06:51:00 PM

மட்டக்களப்பு- நொச்சிமுனை கிராம சேவையாளரை உடன் இடமாற்றுமாறு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நொச்சிமுனை கிராம சேவையாளர் பிரிவில் கடந்த மூன்று வருடங்களாக கிராம சேவையாளராக கடமையாற்றி வரும் கிராம சேவை உத்தியோகத்தரை உடன் இடமாற்றம் செய்யுமாறு கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை வியழக்கிழமை (18) நொச்சிமுனை கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு முன்னால் மேற்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களை அவமதிக்கும் அதிகாரி வேண்டாம், அரச காணியை பணத்திற்கு விற்கும் ஜீ.எஸ். வேண்டாம், பொதுமக்களுக்கு சேவை செய்யாத அதிகாரி எமக்கு தேவையில்லை, அனைத்து ஜீ.எஸ். களுக்கும் இடமாற்றம் ஆனால் இவருக்கு மட்டும் இடமாற்றம் இல்லையாம், பெண்களை மதிக்காத கிராம சேவகர் எமக்கு வேண்டாம், போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது குறித்த ஆர்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எ.சுதர்சன் ஆகியோருடன் பொது மக்களுடன் கலந்துரையாடினர், மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிக்கும் வகையில் மகஜர் ஒன்றினையும் பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.




No comments: