News Just In

12/01/2020 10:57:00 AM

அச்சுறுத்தும் புதிய சூறாவளி: மட்டு - முல்லை இடையே நாளை கரையைக் கடக்கிறது..!!


தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் சூறாவளியாக மாறி நாளை (02.12.2020) புதன்கிழமை மாலை வேளையில் மட்டக்களப்பு - முல்லைத்தீவு இடையே கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, இன்று அதிகாலை 5.30 மணிவரையான நிலவரத்தின் அடிப்படையில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள காலநிலை அவதான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்து நேற்று (30.11.2020) 23.30 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 590 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது.

இத் தொகுதியானது அது அடுத்த 06 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் தொடர்ந்து வரும் 12 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அது பெரும்பாலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் முல்லைத்தீவுக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை நாளை (டிச-02) மாலையளவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய கிழக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

No comments: