News Just In

10/27/2020 07:28:00 AM

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று இலங்கைக்கு வருகை!!


ஆசிய நாடுகளுக்கான அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று இலங்கைக்கு வருகை தருகிறார்.

இன்றிரவு 7.30 அளவில் அவர் கொழும்பை வந்தடைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரை அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு முக்கியத்துவமிக்க விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

இதேநேரம், அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கையில் உள்ள சீன தூதரக காரியாலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயமானது, இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான நட்புறவில் அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கத்தினை உடையது என்று அந்த அறிக்கையில் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய நாடுகளுடன் இலங்கை கொண்டுள்ள தொடர்புகள் குறித்து இலங்கையின் நீண்ட கால நண்பன் என்ற அடிப்படையில் சீனா மகிழ்ச்சி வெளியிட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில், இந்த விஜயத்தின் மூலம் இலங்கை மக்களின் அபிமானத்திற்கு பொருத்தமற்ற வகையில் அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடாது என அமெரிக்காவிடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக சீன பிரதிநிதிகள் குழு விஜயம் மேற்கொண்டிருந்த போது குறைந்த அளவான தரப்பினரே அந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.

அது இலங்கைக்கு பிரச்சினையை ஏற்படுத்தாத வகையில் அமைந்திருந்தது என்பதுடன், இலங்கையின் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய அந்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தாகவும் சீன தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக சிறிய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கள்களை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்காவுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கு தயார் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா பரவல் நிலை அதிகரித்துள்ள சந்தர்ப்பத்திலேயே அமெரிக்க குழுவினரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.

இதேநேரம், அமெரிக்காவில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை எட்டு மில்லியனைக் கடந்துள்ளதுடன், 2 லட்சத்து 30 ஆயிரம் பேரளவில் மரணித்துள்ளனர்.

தொற்று பரவல் நிலையை எதிர்கொண்டிருக்கும் இலங்கைக்குள் அமெரிக்க ராஜாங்க செயலாளர் வருகை தருவதற்கு முன்னர் வேறு தரப்பினர் வருகை தந்தமையானது, சுகாதார விதிமுறைகளுக்கு பாதிப்பானது என சீன தூதரக காரியாலயத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: