News Just In

11/06/2019 09:42:00 PM

தமிழர்களும் முஸ்லிம்களும் ஐக்கியப்படவேண்டும் - கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
தமிழ் மக்களும் முஸ்லிம்களுமாக சிறுபான்மை இனங்கள் ஐக்கியப்படவேண்டும் என தான் அறைகூவல் விடுப்பதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சார பொதுக்கூட்டம் ஏறாவூர் நகரில் அண்மையில் இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய நஸீர் அஹமட் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழரசுக் கட்சி ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏனைய சிறுபான்மைக் கட்சிகள் தங்களது முடிவுகளை ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில் தமிழரசுக் கட்சி மட்டும் ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் வெளிவரும்வரை காத்திருந்தது தற்போது தங்களது முடிவை அவர்கள் அறிவித்து விட்டார்கள். இதுவொரு வரலாற்றுத் திருப்பமாகும்.

இந்த அறிவிப்புக் கிடைத்ததும் தமிழ் மக்கள் மாத்திரமல்ல முஸ்லிம் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இந்த மகிழ்ச்சியின் உள்ளர்த்தம் என்னவெனில் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இனவாதிகளைத் தோற்கடிப்பதில் சிறுபான்மையினங்கள் ஓரணியில் நின்று அரசியல் அதிகாரத்தைப் பிரயோகித்தார்கள்.

இந்த நாட்டில் இனவாதிகளைத் தோற்கடிக்கும் அவ்வாறான சிறுபான்மையினங்களின் ஒற்றுமை இனிமேலும் தொடர வேண்டும் என்பதை இப்போது தரமிழரசுக் கட்யினர் எடுத்துள்ள ஏகோபித்த முடிவு எடுத்துக் காட்டுகிறது. இனவாதம் இந்த நாட்டுக்குச் சாபக்கேடானது என்பதை சிறுபான்மையினரே உலகுக்கு உரத்த தொனியில் உணர்த்த இது சிறந்ததொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

ராஜபக்ஸக்களின் முகாமில் தஞ்சடைந்துள்ளவர்களின் தனிப்பட்ட குணநலன்களை உற்றுக்கவனித்தால் அவர்களிடம் இனவாதத்தைத் தவிர வேறேதும் இல்லை. அவர்களிடம் இயல்பாகவே குடிகொண்டுள்ள இனவாதம் இந்த நாட்டையும் அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தையும் அழிவுக்கு இட்டுச் செல்லவே வழிவகுக்கும் என்பதை அந்த மூடர்கள் அறியமாட்டார்கள்.

உண்மையில் இந்த அறிவிலிகள் தங்கள் சமூகத்தின் மீது பற்று வைப்பார்களாயின் அடுத்த சமூகத்தை அரவணைத்துப்போவதே சிறந்த மாற்றுத் தீர்வாக இருக்கும். ஆனால் அந்த ஆக்கபூர்வமான பரந்துபட்ட சிந்தனை இந்த அற்பத்தனமான அறிவிலிகளிடம் வந்து சேரும் என்பதற்கு வாய்ப்பே இல்லை.

எனவே எல்லா சமூகங்களிலும் நடமாடித் திரியும் இனவாதிகளை ஓரங்கட்ட இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி நாட்டை இணைந்து அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வோம் என்றார்.

No comments: