News Just In

5/01/2026 06:51:00 PM

மே தினத்தில் HNDA பட்டதாரிகள் குரல் உயர்த்தினர்: அங்கீகாரம், சம்பளம், சேவை அமைப்பில் சீர்திருத்தம் கோரி ஊடகவியலாளர் சந்திப்பு

மே தினத்தில் HNDA பட்டதாரிகள் குரல் உயர்த்தினர்: அங்கீகாரம், சம்பளம், சேவை அமைப்பில் சீர்திருத்தம் கோரி ஊடகவியலாளர் சந்திப்பு


நூருல் ஹுதா உமர்

மே தினத்தை முன்னிட்டு, இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா (HNDA) பட்டதாரிகள் தங்களது தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனையில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், நீண்டகாலமாக நிலவி வரும் தொழில்முறை அங்கீகாரக் குறைபாடு, சம்பள அநீதி மற்றும் சேவை அமைப்பில் உள்ள சிக்கல்கள் குறித்து தீவிர கவலை வெளியிடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் கருத்து தெரிவித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், கணக்கியல் துறையில் பணியாற்ற தேவையான முழுமையான தகுதிகள் இருந்தும், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் அரசுத் துறைகளில் உரிய அங்கீகாரம் பெறாமல் பின்தள்ளப்படுவதாக குற்றம்சாட்டினர். குறிப்பாக, பட்டப்படிப்பு தகுதியுடன் இணையான நிலை வழங்கப்படாதது காரணமாக பதவி உயர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தொழிற்சங்கங்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதிமொழிகளை இதுவரை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்கான தனித்த சேவை அமைப்பை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கைகள் பலமுறை அறிவிக்கப்பட்டும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சம்பள கட்டமைப்பில் நிலவும் வேறுபாடுகளும் இச்சந்திப்பில் முக்கியமாக முன்வைக்கப்பட்டன. ஒரே பணியை மேற்கொள்ளும் பட்டப்படிப்பு தகுதியாளர்களுடன் ஒப்பிடும்போது உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் குறைந்த சம்பளம் பெறுகின்றனர் என்பதுடன், சேவை அனுபவம் அதிகரித்தாலும் அதற்கேற்ற சம்பள உயர்வுகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்கால தேவைகள் தொடர்பாக பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா தகுதியை பட்டப்படிப்பிற்கு இணையானதாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தல், தனித்த சேவைப் பிரிவை உடனடியாக அமல்படுத்தல், சமச்சீர் சம்பள கட்டமைப்பை உறுதி செய்தல், பதவி உயர்வுகளில் சம வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் மேலதிக கல்வி மற்றும் தொழில்முறை முன்னேற்ற வாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவை அடங்குகின்றன.

அரசுக்கு மூன்று ஆண்டுகள் காலம் கொடுத்துள்ளோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கடந்த காலத்தில் போராடியது போல போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என இந்த தொழிற்சங்கம் எச்சரித்துள்ளன.

இதன்போது மறைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களுக்கு மௌன பிரார்த்தனை செய்யப்பட்டதுடன் இந்த தொழில் சங்க வளர்ச்சியில் பங்காற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளர்களான கே.கோபாலசிங்கம், ஏ.எஸ்.எம். முஜாஹித் ஆகியோர் பொன்னாடை போத்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மே தினத்தின் பின்னணியில் வெளிப்பட்ட இந்தக் கோரிக்கைகள், நாட்டின் தொழிலாளர் உரிமைகள் மற்றும் கல்வித் தகுதிகளின் மதிப்பீடு குறித்து மீண்டும் கவனம் ஈர்த்துள்ளன.

No comments: