சாய்ந்தமருது நகர சபை சம்பந்தமான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டு விரைவில் எல்லை நிர்ணயம் செய்யப்பட உள்ள சூழ்நிலையில் சாய்ந்தமருதின் அயல் பிரதேசமாக உள்ள காரைதீவு பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள மாளிகைக்காடு எல்லையை சரியான முறையில் அடையாளப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் பிரதேச சபையில் முன்மொழிவொன்றை இன்று முன்வைத்தார்.
காரைதீவு பிரதேச சபையின் 04 வது சபையின் 11வது மாதாந்த சபைக் கூட்டம் இன்று 14/05/2026 வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு சபா மண்டபத்தில் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
காரைதீவு பிரதேச சபை எல்லை தொடர்பில் முரண்பாடான பல கருத்துக்கள் பரவி வரும் சூழ்நிலையில் முறையான எல்லையை வரையறுத்து அவற்றை மக்களுக்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் மாளிகைக்காடு மேற்கு பிரதேசத்தில் பாதை அபிவிருத்திகளை நாம் செய்துள்ளோம். அதனை வேறு பிரதேச நிர்வாக எல்லையாக காட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை சீரமைத்து ஒழுங்கான நிர்வாக எல்லை வரையறுக்கப்பட வேண்டும்.
மேலும் மாளிகைக்காடு பிரதேசத்தில் வடிகான்கள் துப்பராக பேணப்படாமையால் டெங்கு ஆபத்துக்கள் உள்ளது. மக்களை மட்டும் குறை கூறாது நமது பொறுப்புக்களையும் நாம் செய்ய வேண்டும். உடனடியாக மக்களின் பிரச்சினைங்களை தீர்க்க சபை முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
இவற்றுக்கு பதிலளித்த தவிசாளர் எஸ். பாஸ்கரன்,
காரைதீவு பிரதேச சபை எல்லை வரைபடம் தம்வசம் இருப்பதாகவும், பிரதேச எல்லைகளில் பிரச்சினைகள் வராமல் நடவடிக்கை எடுப்பதாகவும், காரைதீவு பிரதேசத்தின் எல்லை மாளிகா வீதியின் மத்திய கோட்டினால் பயணித்து கைவிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தையும்- மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலையும் ஊடறுத்து செல்லும் வீதிவரை உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், காரைதீவு பிரதேச சபை பிரதேசங்களில் வடிகான்கள் துப்பராக பேண மக்களின் ஒத்துழைப்பை தான் எதிர்பார்ப்பதாவும், முடியுமானவரை மக்களின் நலனில் சபை அக்கறை செலுத்துவதாகவும் பிரதி தவிசாளரின் கோரிக்கைக்கு இவ்வார இறுதிக்குள் தீர்வை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments: