News Just In

2/24/2026 11:56:00 AM

நோன்பு காலத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் விசேட சுகாதார பரிசோதனைகள்

நோன்பு காலத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் விசேட சுகாதார பரிசோதனைகள்


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் தலைமையிலான பணிகளின் தொடர்ச்சியாக, புனித நோன்பு காலத்தை முன்னிட்டு விசேட சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில், சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையங்களில் இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைகளின் போது உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறை, காலாவதி திகதிகள், சுற்றுப்புறத் தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பாக நோன்பு காலங்களில் அதிகளவில் உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை நடைபெறும் நிலையங்களை கவனத்தில் கொண்டு கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்தல், பாதுகாப்பாக சேமித்தல் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப விற்பனை செய்தல் தொடர்பான சுகாதார விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து விற்பனையாளர்களுக்கு உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் தரமான உணவுகளைப் பெறுவதை உறுதிசெய்வதே இப்பணியின் முக்கிய நோக்கமாகும் என சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments: