அக்கரைப்பற்று மாநகரத்தை பிழையான திசையில் வழிநடத்த அனுமதிக்க முடியாது என்றும், தாங்கள் இருக்கும் இடங்களில் தீர்வுகளை வழங்கி, முன்னோக்கி நகரும் செயலாக்கமே தங்களது அடிப்படை வழிமுறை எனவும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று மாநகர சபை அமர்வில் உரையாற்றிய அவர், 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாதைத் திட்டம் அக்கரைப்பற்றுக்கு தேவையில்லை எனக் கூறுவது அறிவார்ந்த செயலா எனக் கேள்வி எழுப்பினார். கடந்த காலங்களில் 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வீதித் திட்டங்களை நாங்கள் செயல்படுத்த வில்லையா? எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இவ்வாறானவர்களின் ஆலோசனைகளின் விளைவாக கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலைமைகளை முதல்வர் அறியாதவரல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். அதே நேரம், நேர்மையான கூற்றுகளை ஏற்றுக்கொண்டு சரியான நிலைப்பாட்டை எடுத்த முதல்வருக்கு தங்களது நன்றிகளையும் அவர் இச்சபை அமர்வில் தெரிவித்தார்.
மாநகரத்தின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, அபிவிருத்தி நடவடிக்கைகள் தடை இன்றியும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு எனவும் உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் வலியுறுத்தினார்.
No comments: