ஒருபோதும் கைவிடோம் என்கிறார் சிறிநாத் MP

தமிழ் மக்களின் மிக முக்கிய கோரிக்கையான சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒருபோதும் கைவிடாதென பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்சந்திப்பில் மேலும் தெரிவித்த அவர், “பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்த விடயங்களையும் செய்ய முடியாதென்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றில் எங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே குறைந்த தீர்வாக இந்தியா கொண்டு வந்த 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபை அதிகாரத்தை பெற்று அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளை செய்ய வேண்டும்.புதிய ஆண்டு பிறக்கும் நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்பார்ப்புக்கள், அபிவிருத்திகள், வாழ்வாதாரங்கள் முற்றுமுழுதாக கொண்டு செல்லப்பட்டுள்ளதா? என்று பார்த்தால் ஒரு ஏமாற்றமான நிலைமையே எஞ்சியிருக்கின்றது.
2025ஆம் ஆண்டில் புயல் ஏற்பட்டு, தமிழ் மக்களுடைய பிரதேசங்களில் பாரியளவிலான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.
யுத்தகாலப் பகுதியில் சிதைக்கப்பட்ட கட்டுமானங்கள் இன்னும் மீண்டெழ முடியாதளவுக்கு தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை பெரிதும் பாதித்திருக்கின்றன. தற்போது இந்தப் புயல் காரணமாகவும் மக்களின் நிலை மேலும் மோசமாகியுள்ளது.
அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆகக் குறைந்த தீர்வாக 13ஆவது திருத்தத்தினூடாக வழங்கப்பட வேண்டிய மாகாண சபை அதிகாரங்கள் கூட பாரியளவில் இழுத்தடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது
மிக இலகுவாக பாராளுமன்றத்தின் அனுமதியுடன் செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது.
13வது திருத்தத்தின் ஊடான இந்த மாகாண சபையை நாம் முதல் மிக வெற்றிகரமாக அதன் முழுமையான அதிகாரங்களை பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட அரசியல் நகர்வாக செய்ய வேண்டும் என்பதே யதார்த்த கள அரசியல் ஆகும் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமிழ் மக்களின் மிக முக்கியமான கோரிக்கை சமஸ்டி முறையிலான தீர்வாகும்.
அதனை ஒருபோதும் இலங்கை தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுக்காது.
No comments: