News Just In

11/18/2025 03:42:00 PM

சிங்கள பௌத்தமயமாக்கலே இனப்பிரச்சினையின் மூல காரணம் - யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!

சிங்கள பௌத்தமயமாக்கலே இனப்பிரச்சினையின் மூல காரணம் - யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!




சிங்கள பௌத்தமயமாக்கல் தான் இனப்பிரச்சினையின் மூல காரணம். இன்றல்ல. நேற்றல்ல. கடந்த 76 வருட காலமாக தமிழர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்கள மயமாக்கல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் தமிழர் தாயகத்தை அண்டிய கடற்கரைப்பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக புத்த பிக்குகளினால் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருக்கின்றது. இது தொடர்பிலான பிரச்சினைகள் மேலோங்கி வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஊடக சந்திப்பு ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலையில் தமிழர் தாயகத்தில் கடற்கரைப்பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக புத்த பிக்குகளினால் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருக்கின்றது.அங்குள்ள தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பின் பின் சட்ட அனுமதியற்ற கட்டுமானம் என்று சொல்லி ஸ்ரீலங்கா பொலீசாரினால் அப்புறப்படுத்தப்படுகின்றது.

இதன்பிறகு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் புத்தர்சிலையின் பாதுகாப்பு காரணமாக தான் அப்புறப்படுத்தப்பட்டது மீண்டும் நிறுவப்படும் என்ற பின் மீண்டும் அதே இடத்தில் அரசாங்கத்தால் புத்தபிக்குகள் மற்றும் பொலீசாருடன் இணைந்து அதே புத்தர் சிலை நிறுவப்படுகின்றது.மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகும் என்று நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்.இது இன்று நேற்றில்லை 76 வருடகாலமாக இந்த நாட்டில் இது தான் நடந்தேறியிருக்கின்றது.

சட்டமுரணாக தமிழர் தாயகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை அகற்றப்பட்ட பின் பாராளுமன்றத்தில் மீண்டும் நிறுவுவோம் என்று குறிப்பிட்டு மீள சிலையை மக்களின் எதிர்ப்புக்களை மீறி நிறுவியிருக்கும் செயல் எந்த அரசு அதிகாரத்திற்கு வந்தாலும் சிங்கள பேரினவாதப்போக்கு மாறாது என்பதையே உணர்த்துகின்றது.

புத்தர் சிலையின் பாதுகாப்பு கருதி அகற்றப்பட்டிருக்கின்றது என்று சொல்லுவது தொடர்ச்சியாக சிங்கள மக்களிடத்தில் தமிழர்களை தீயவர்களாக சித்தரிப்பதைத் தான் எடுத்துக்காட்டுகிறது.புத்தர் சிலையை வைத்தது யார்? அமைதியாக தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழும் தமிழ் மக்களை குழப்பியது யார் ? புத்தர் சிலையை அகற்ற வந்த பொலீசாரின் கன்னத்தில் அறைந்தது யார்? இவர்களுக்கு எதிராக எல்லாம் இந்த நாட்டில் சட்டம் செயற்படாதா? நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களுக்கான சேவையை ஆற்றுவதைக்காட்டிலும் புத்த பிக்குகளின் பேச்சை வேதவாக்காக கேட்டு நடப்பதையே இனப்பிரச்சினை தொடங்கிய காலகட்டத்திலிருந்து அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

ஏன் இனப்பிரச்சினையின் முக்கியகாரணமே சிங்களபௌத்தமயமாக்கல் தான்.யுத்தத்தின் ஆணிவேரும் இது தான். தொடர்ச்சியாக தமிழர் நிலங்கள் புத்த வழிபாடு என்ற பெயரிலே பௌத்த சிங்களமயமாக்கப்பட்டுக்கொண்டே இருந்துவந்துள்ளது.சிங்கள குடியேற்றங்களால் தமிழர் குடியேற்றப்பரம்பல் மாற்றியமைக்கப்பட்டுக்கொண்டே இருந்து வந்துள்ளது. வரலாற்றில் மகாவலி ஓயா மற்றும் கல் ஓயா குடியேற்றம் என்று தமிழர் நிலங்கள் முற்றுமுழுதாக பெயர் மாற்றம் பெற்று முழுவதுமாக மாறியிருக்கிறது.தொடர்ச்சியாக இன்றுவரை தமிழர்களின் தொல்லியல் நிலங்களான குருந்தூர் மலை ,வெடுக்குநாறிமலை,உகந்தை மலை என்று பல்வேறு இடங்களில் பௌத்த ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது.

தையிட்டி,திரியாய் என்று தமிழர் நிலங்களும் இதில் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றது.இதில் இருந்து தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு விடயம் தவறாமல் நடக்கும் .அது சிங்கள பௌத்தமயமாக்கல்.ஏன் என்றால் அது திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரல்.தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றுவதென்பது மாறி மாறிவரும் சிங்கள ஆட்சியாளர்களால் காலத்திற்கு காலம் நிகழ்ந்தேறிக்கொண்டே இருந்து வந்துள்ளது.

சிங்கள மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை.நாங்கள் அனைத்து மதத்தையுமே சமமாக மதிப்பவர்கள்.அனைத்து சமய வழிபாடுகளையும் மதித்து நடப்பவர்கள் அவமதிப்பது கிடையாது. ஆனால் வழிபாடு என்ற பெயரிலே திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களால் தமிழருடைய நிலங்கள் பறிபோவதென்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

No comments: