நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டம் கல்முனை – நாவிதன்வெளி பிரதான சாலையை இணைக்கும் கிட்டங்கி தாம்போதியை ஊடறுத்து பாயும் வெள்ளநீரின் அளவு அதிகரித்ததனால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளநீருடன் பெருமளவில் தேங்கி வரும் ஆற்று வாழை (Salvinia) பாலப்பகுதியில் சிக்கித்தங்கி, நீரின் ஓட்டத்தையும் வாகனப் போக்குவரத்தையும் முடக்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் இயல்பான பயணங்களில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது மட்டுப்படுத்தப்பட்ட படகு சேவை மூலம் மட்டுமே மக்கள் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்து, நிலைக்கு தீர்வு காண நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களின் வழிகாட்டலின் கீழ், பிரதேச சபை செயலாளர் நேரடி மேற்பார்வையில், கனரக JCB இயந்திரம் பயன்படுத்தி ஆற்றில் தேங்கியுள்ள ஆற்று வாழைகளை அகற்றும் பணிகள் விரைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளநீர் தணியும் வரை மற்றும் அகற்றும் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சவளக்கடை பொலிஸாரும் கடற்படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments: