
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வாதகல்மடு எனும் கிராமத்தில் குறித்த பெண் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கையில், தகரத்தினால் அமைத்த வீட்டினுள் இருந்த நெல்லினை உண்பதற்காக வந்த காட்டு யானையை கண்டு பயத்தில் வெளியே ஓடிய போது யானை தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் 58 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான வைரமுத்து மலர் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கமைவாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டு விசாணைகளை மேற்கொண்ட பின், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் செல்லுமாறு பணித்துள்ளார்.
இதேவேளை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தயின் அனுமதிக்கமைவாக பிரதேச செயலகத்தினால் யானை தாக்கி இறந்தமைக்காக பத்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படதுடன், முற்பணமாக மரண சடங்கிற்கு இறந்தவரின் மகனிடம் ஒரு இலட்சம் ரூபா காசேலையினை கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தரினால் வைத்தியசாலையில் வைத்து வழங்கப்பட்டது
No comments: