News Just In

6/08/2025 10:02:00 AM

தமிழ் தேசியத்தை நேசிக்கும் எம் போன்ற இளைஞர்களுக்கு ஓர் உத்வேகமாக, முன்மாதிரியாக திகழ்ந்தவர்- மாவை சேனாதிராஜா..!

தமிழ் தேசியத்தை நேசிக்கும் எம் போன்ற இளைஞர்களுக்கு ஓர் உத்வேகமாக, முன்மாதிரியாக திகழ்ந்தவர்- மாவை சேனாதிராஜா..!
இரா சாணக்கியன் 



நேற்றைய தினம் 06.06.2025 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நினைவுரையின் போது. மறைந்த எம் பெரும் தலைவர் மாவை சேனாதிராசா (சோமசுந்தரம் சேனாதிராஜா) அவர்களை நினைவு கூர்ந்து எனது உரையானது அமைந்திருந்தது.

எனது உரையானது. அஞ்சலி செலுத்தப்படுகின்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது இதய பூர்வமான அஞ்சலிகள். எமது பெருந் தலைவர் சோமசுந்தரம் மாவை சேனாதிராஜா அவர்களுக்கும் எனது அஞ்சலிகள். ஒரு சம்பவத்தைக் கூறி என் உரையை ஆரம்பிக்கின்றேன். புரட்சிகர தலைவராக செயற்பட்ட மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக 9வது பாராளுமன்றத்திலே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பேசிய போது மிக மிகக் கடுமையான தொனியில் தமிழ் மக்களின் அபிலாசைகள் பற்றி ஜனாதிபதிக்கு விளக்கினார். “வடக்கு கிழக்கு இணைந்த வகையில் தமிழ் மக்களே ஆளக்கூடிய வகையில் சந்தர்ப்பமளிக்காத எந்தவொரு அரசியல் தீர்வையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” எனக் கூறிய மாவை சேனாதிராஜா அவர்களின் வார்த்தைகள் இளம் அரசியல்வாதியாகிய எனக்கு நம்பிக்கை அளித்தது. தமிழ் மக்களின் அரசியல் கொள்கைகளை விட்டுக் கொடுக்க கூடாது எனும் எண்ணம் அவரது குழுக் கூட்டங்களிலே தென்பட்டது. புரட்சிகரமான பிரவேசமாகவே அவரது பாராளுமன்றப் பிரவேசம் காணப்பட்டு தொடர்ந்து 25 வருடங்கள் தமிழ் மக்களுக்காக உழைத்தார். பல இளைஞர்களை தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முயன்றார். 5 வருடங்கள் தேசியப் பட்டியலில் இருந்த போது கிழக்கு மாகாண அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் பிரச்சனைகளைப் பற்றியே அதிகம் பேசினார். பல பணிகளையும் அங்கு மேற்கொண்டார். சரளமாக அனைவருடனும் பழகக் கூடியவர். பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு முன்பதாகவே அவர் உட்பட 42 பேர் மிக நீண்ட காலம் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் ஆட்சியிலே அரசியல் கைதிகளாக சிறையிலே அடைக்கப்பட்டனர். தனக்கான கொலை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் தான் இறக்கவில்லை எனக் கூறி மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்தார். எனது பாட்டனார் சி.மூ.இராசமாணிக்கம் ஐயா இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில் அவரது இளைஞர் பேரவையில் உறுப்பினராக இருந்து பணியாற்றினார். மிக நெருக்கமான உறவினை எனது குடும்பத்துடன் கொண்டிருந்தார். நான் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிலே இணைந்து செயற்பட வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை எனக்கு தினமும் வழங்கினார். ஐயாவினுடைய இழப்பு முழு நாட்டிற்குமே பெரிய இழப்பு. பெரும்பான்மை சமூகத் தலைவர்களாலே பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு தலைவரே மாவை சேனாதிராஜா அவர்கள். யுத்தம் முடிவுற்ற பின் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் எனவும், தமிழ் மக்கள் இந் நாட்டிலே கௌரவமான இனமாக வாழ வேண்டும் எனவும், முடிவுற்றது ஆயுதப் போராட்டம் மட்டுமே தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டம் முடிவடையவில்லை எனவும் குரலிட்டார். 

No comments: