News Just In

5/31/2025 10:09:00 AM

பிள்ளையான் அலுவலகத்திற்குள் பிணங்கள்? மட்டக்களப்பில் வேகமாகப் பரவும் செய்திகள்!

பிள்ளையான் அலுவலகத்திற்குள் பிணங்கள்? மட்டக்களப்பில் வேகமாகப் பரவும் செய்திகள்!!


இன்று காலை முதல் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள பிள்ளையானின் அலுவலகம் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த அலுவலகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதான ஒரு செய்தி மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பரவி வருகின்றது.

அலுவலகத்தின் நிலத்தின் கீழே இரண்டு பிணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சிறிலங்கா குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர் TMVP அலுவலகத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

மேலும், விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்ட பிள்ளையானின் அலுவலம் தற்போது வரை தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  செய்திகள் வருகின்கிறது 

இதன்போது அலுவலக கட்டிட நிலத்தை உடைத்து தோண்டி பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது அங்கிருந்து 9mm ரக துப்பாக்கியின் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் TMVP அலுவலகங்களில் பலர் கொலை செய்யப்பட்டு, அலுவலகங்களின் உள்ளேயே புதைக்கப்பட்டதான பல தகவல்களை முன்னாள் ரி.எம்.வி.பி. உறுப்பினர்கள் ஊடகங்களில் வெளியிட்டு வருகின்ற நிலையில், ஒரு வாகன ஓட்டுனர் உட்பட இரண்டு சடலங்கள் மட்டக்களப்பு TMVP அலுவலக கட்டிடத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் ஏற்கனவே தமது உறுப்பினர்கள் மத்தியில் உலா வந்ததாக ஒரு முன்னாள் TMVP உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு அலுவலகம் எதற்காகச் சுற்றிவளைக்கப்பட்டு இருக்கிறது என்றோ, இன்று முழுவதும் அங்கு என்ன தேடப்பட்டது, என்னென்ன கண்டுபிடிக்கப்பட்டன என்ற விவரங்களையோ காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.

அப்படி இருக்கையில், அங்கு ஏற்கனவே புதைத்து வைக்கப்பட்ட சடலங்கள், எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அலுவலக கட்டிடத்தின் அடியில் நிலக்கீழ் சுரங்கம் ஒன்று காணப்பட்டதாகவும் கூட பல செய்திகள், வதந்திகள் மக்கள் மத்தியில் பரவிக் கொண்டிருக்கின்றன.

அதேவேளை, மட்டக்களப்பில் TMVP போன்ற குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த ஆயுதக் கலாச்சாரத்திற்கு எதிராக காவல்துறை எடுத்து வருகின்ற இது போன்ற நடவடிக்கைகளை மக்கள் பாராட்டியும் வருகிறார்கள்.

No comments: