கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) வருடாந்த பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டமும் நடப்பு ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவும் கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி பணிமனை சார்பில் காரைதீவு கோட்டத்திற்கான கோட்டக் கல்விப் பணிப்பாளரும், பிரதிக் கல்விப் பணிப்பாளருமாகிய ஏ. சஞ்ஜீவன் அவர்கள் கலந்து கொண்டார்.
கல்லூரியின் முதல்வரினால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பெளதீக வள அபிவிருத்தி பணிகள், கல்விசார் செயற்பாடுகள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு பணிகள், வரவு செலவு திட்ட கணக்கறிக்கைகள், எதிர்கால திட்ட வரைவுகள் தொடர்பான பல தரப்பட்ட தலைப்பில் விரிவான விளக்கங்கள் சபையினருக்கு எடுத்துரைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு முன்னாள் செயலாளர் எஸ்.எல். அஸீஸ் மற்றும் முன்னாள் உறுப்பினர் எம்.ஐ.எம்.சதாத் ஆகியோரினால் பாடசாலை அபிவிருத்தி குழுவினால் கடந்த இரண்டு ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்ட கல்வி, பெளதீகம், சுற்றாடல் பாதுகாப்பு, விழாக்கள் தொடர்பான செயற்பாடுகள் வெற்றிகள், சவால்கள், எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்காக திட்டமிடப்பட்ட விடயங்களை சபையினரிடம் முன்வைத்ததுடன் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
2025ஆம் நடப்பு ஆண்டுக்கான பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு புதிய அங்கத்தவர் தெரிவானது பெற்றோர்களின் பெரும்பான்மையினரின் பங்குபற்றுதலுடன் ஏகமனதாக எதிர்வரும் இரண்டு ஆண்டுகள் (2025-2027) வரை செயற்படும் வண்ணம் தெரிவு செய்யப்பட்டனர்.
அதில் தலைவராக பதவி வழியில் கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களும், செயலாளராக பிரபல உயிரியல் பாட ஆசிரியரும், சமூக செயற்பாட்டாளருமான எம்.எஸ்.ஐ. ரிஷாத் ஷெரீஃப் அவர்களும், உறுப்பினர்களாக விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுல் ரஹ்மான் (கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்), ஏ.சி. சமால்டீன் (கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்), பி.எஸ். சன்சீர் (பிரதேச செயலக உத்தியோகத்தர்), ஊடகவியலாளர் யூ.கே. கலித்தீன் (கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்), புகழ்பெற்ற கலைஞர் எம்.சி.ஏ. மாஹிர் (ஆசிரியர்), தொழிலதிபர்களான எம்.வை. ஹிதாயத்துல்லா, எம்.எச்.எம். ஜிம்சாத் ஆகியோர்களுக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு மேலதிகமாக பாடசாலை பழைய மாணவிகள் அமைப்பின் சார்பிலான பிரதிநிதிகளும், ஆசிரியர்கள் சார்பிலான பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
No comments: