
தனது கணக்கில் பெறப்பட்ட அனைத்து பணத்தையும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்ல பெற்றுக்கொண்டதாக கெஹலியவின் செயலாளர் நிஷாந்த பண்டார பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பு தலைமை நீதிபதி தனுஜா லக்மாலி முன்னிலையில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
தனது பெயரில் ஒரு கணக்கு திறக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கணக்கிற்கான புத்தகம் உட்பட அனைத்தும் அமலி ரம்புக்வெல்லவிடம் இருந்ததாக பஸ்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடகம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக பணியாற்றிய 2021/2023ஆம் ஆண்டு காலப்பகுதியில், கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர்களாக 15 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கூடுதல் நேரக் கொடுப்பனவுகளை அவரது தனிப்பட்ட செலவுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம், அரசாங்கத்திற்கு 80 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்லவின் இணைப்புச் செயலாளராக பணியாற்றிய நிஷாந்த பண்டார பஸ்நாயக்கவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் போது, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த தகவல்களை நேற்று வெளியிட்டது.
சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தை குறிக்கும் அறிக்கையை சமர்ப்பித்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வந்த பஸ்நாயக்கவிடம் வாக்குமூலத்தை பெற்ற பின்னர் அவரைக் கைது செய்ததாக தெரிவித்தனர்.
No comments: