News Just In

5/28/2025 11:39:00 AM

தமிழின அழிப்பு நினைவகத்தை சேதப்படுத்திய விசமிகள் - கனடா பொலிஸார் தீவிர விசாரணை

தமிழின அழிப்பு நினைவகத்தை சேதப்படுத்திய விசமிகள் - கனடா பொலிஸார் தீவிர விசாரணை




இலங்கையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக, கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

பிரம்டன் நகரில் சிங்காவுசி பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் இந்த மாதம் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

தமிழின அழிப்பு நினைவகம் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நினைவுத்தூபியை பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் திரைச்சீலை நீக்கி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து நாடா வெட்டி திறந்துவைத்தனர்.

இந்நிலையில் இந்த நினைவகம் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் சேதப்படுத்தப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

தமது முகங்களை மூடிய நிலையில் இனந்தெரியாத நபர்கள் நினைவகத்தை சேதப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் குறித்து Peel பிராந்திய பொலிஸில் முறையிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகிறது.

இந்நிலையில் சிசிரிவி கமராக்களின் உதவியுடன் சந்தேகநபர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கனடாவின் தமிழின அழிப்பு நினைவகத்திற்கு இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் அநுர அராசாங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: