News Just In

6/05/2024 07:49:00 AM

மோடிக்கு மக்கள் தீர்ப்பு: கூட்டணி துணையுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு!




 400+ இலக்கு என்ற அறைகூவலுடன் தேர்தலை எதிர்கொண்ட பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 290+ இடங்களை வசப்படுத்துகிறது. பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததால் தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கும் நிலையே மோடிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இந்திய ஜனநாயகத் திருவிழாவின் முடிவு பற்றிய ‘இந்து தமிழ் திசை’யின் தொகுப்பு வருமாறு: நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் ஏற்கெனவே சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்ற நிலையில் எஞ்சிய 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இரவு 7 மணி நிலவரப்படி பாஜக தனித்து 239 வசப்படுத்துகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து பாஜக கூட்டணி 290+ இடங்களில் வெற்றி முகம் கண்டுள்ளது. ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.

இது ஒருபுறம் இருக்க இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 90+ இடங்களை தனித்து வசப்படுத்துகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து 235 தொகுதிகளை எட்டுகிறது.

இந்தச் சூழலில் ஆட்சி அமைப்பது பற்றி புதன்கிழமை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முக்கிய ஆலோசனை நடத்துகிறது. இதில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சி கலந்து கொள்கிறது. மக்களவைத் தேர்தலில் இந்தக் கட்சியின் என்டிஏவில் அங்கம் வகித்தன. இந்த இரு கட்சிகளின் தலைவர்களான சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் இப்போது கிங் மேக்கர்களாக கவனம் ஈர்த்துள்ளனர்.

No comments: