News Just In

8/09/2023 07:53:00 AM

மாணவனை வன்புணர்விற்கு உட்படுத்திய ஆசிரியரை நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

மாணவனை வன்புணர்விற்கு உட்படுத்திய ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாணவனை வன்புணர்விற்கு உட்படுத்திய ஆசிரியர் தலைமறைவான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) காவல்துறையில் சரணடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்ற நீதவான் ரி. கருணாகரன் உத்தரவிட்டார்.

அத்துடன் இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பாடசாலை அதிபரை தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறும் உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக செயற்பட்டு வந்த சந்தேக நபர் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி விளையாட்டு அறையில் வைத்து மாணவனை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்ததாக தெரிவித்து ஓகஸ்ட் 2 ஆம் திகதி அம்மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் .

இந்த சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட மாணவன் அதிபரிடம் முறையிட்டதுடன் இரு வாரங்கள் கழிந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களுக்கு பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: