கராப்பிட்டிய வைத்தியசாலையில் எட்டு மாதக் கைக்குழந்தையின் துயர மரணத்தைத் தொடர்ந்து, மூளைக்காய்ச்சல் நோய் சமூகத்தில் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் எழுந்துள்ளன.
சமீபத்தில் காலி சிறைச்சாலையில் இந்த நோய் முதலில் கண்டறியப்பட்டது. மூளைக்காய்ச்சல் நோய் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட சிசு, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளது.
காலி சிறைச்சாலைக்குள் பரவி வரும் மூளைக்காய்ச்சல் நோயினால் மரணம் நேரிட்டதா என சுகாதார அதிகாரிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், இந்த மரணம் மூளைக்காய்ச்சல் நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் அதே வேளையில், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார சேவைகளின் பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் கோனார சோமரத்ன தெரிவித்துள்ளார்.
“உடல் மாதிரிகள் மேலதிக விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளன,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
காய்ச்சல், சளி, சோர்வு, வாந்தி அல்லது குளிர்ந்த கைகள் மற்றும் கால்கள் போன்ற அறிகுறிகளை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் தனிநபர்களை வலியுறுத்தியுள்ளன.
மூளைக்காய்ச்சல் நோயினால் இரண்டு கைதிகள் அண்மையில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு மரணங்களும் மூளைக்காய்ச்சல் நோயினால் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
No comments: