News Just In

3/08/2023 07:44:00 AM

இந்தோனேசியாவில் பூமிக்குள் மொத்தமாக புதையுண்ட மக்கள்: மீட்புப் பணி தீவிரம்!

இந்தோனேசியாவில் கன மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட இருவேறு நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் நட்டுனா ரீஜென்சி பகுதி கிராமங்களிலேயே குறித்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மாயமாகியுள்ள 42 பேர்களுக்காக தீவிரமாக தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜென்டிங் மற்றும் பங்கலான் கிராமங்களில் டசின் கணக்கான இராணுவ வீரர்கள், பொலிசார் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றியுள்ள மலைகளில் இருந்து மழை வெள்ளத்துடன் கலந்து வந்த டன் கணக்கிலான சேற்றில் புதைந்துள்ள 27 வீடுகளில் 42 பேர்கள் வரையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செவ்வாய்க்கிழமை பகல் வரையில் 10 பேர்கள் வரையில் இறந்திருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவை அடுத்து 1,200 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர், அவர்கள் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பிற தங்குமிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவை பொறுத்தமட்டில் 17,000 தீவுகளில் மில்லியன் கணக்கான மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலும் மலைப்பகுதி அல்லது ஆறுகளுக்கு நெருக்கமாக வளமான வெள்ள சமவெளிகளுக்கு அருகில் குடியிருக்கின்றனர்.

மேலும் சமீபத்திய நாட்களில் பருவ மழை இந்தோனேசியாவின் பெரும்பகுதி முழுவதும் டசின் கணக்கான நிலச்சரிவுகள் மற்றும் பரவலாக பெருவெள்ளத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 2022 ல், மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 335 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: