News Just In

2/06/2023 01:55:00 PM

சாய்ந்தமருது அஹதிய்யா சம்மேளனத்தின் 30 வருட பூர்த்தியும் கலை கலாச்சார நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்!




மாளிகைக்காடு நிருபர்

சாய்ந்தமருது தாறுல் குர்ஆனியா அஹதிய்யா சம்மேளனத்தின் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு, கலை கலாச்சார நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் சாய்ந்தமருது தாறுல் குர்ஆனியா அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவர் அஷ் செய்க் ஏ.எம்.அன்ஸார் (தப்லீகி) தலைமையில் அல் ஹிலால் வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலிக், சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல்.நசார், சாய்ந்தமருது கமு/கமு/மழ்ஹருஸ் சம்ஸ் மகா வித்தியாலய அதிபர் எம்.சி.என்.றிப்கா அன்ஸார், சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலய அதிபர் ஏ.ஐ.சம்சுதீன், சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ.ஹிபதுள் கரீம், சாய்ந்தமருது உலமா சபையின் தலைவர் அஷ் செய்க் சலீம் (ஷர்கி) அம்பாறை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத்தின் தலைவர் யூ.எல்.றிபாஉத்தின் (காஸிபி) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அல் ஹிலால் அஹதிய்யா பாடசாலை, அஸ் சபீனா அஹதிய்யா பாடசாலை மற்றும் தாறுல் குர்ஆனியா அஹதிய்யா பாடசாலைகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் அதிதிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கும் வைபவமும் இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் தங்களது உரைகளின்போது பௌத்த இந்து மற்றும் கிறிஸ்தவ சமயத்தவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இடம்பெறும் அவர்களது சமயம் சார்ந்த அஹதிய்யா போன்ற கல்விக் கூடங்களில் இணைந்து கொண்டு மார்க்க ரீதியான கல்வி உள்ளிட்ட அறிவைப் பெறுவது போன்று முஸ்லிம் மாணவர்கள் அஹதிய்யா பாடசாலைகளை பயன்படுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

தற்கால மாணவ மாணவிகளில் பலர் மார்க்கக் கல்வியை சீராக கற்று அதன்படி நடந்து கொள்ளாததன் காரணமாக பல்வேறு வேண்டப்படாத சிக்கல்களுக்குள் சிக்கித்தவிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நிகழ்வில் அஹதிய்யா பாடசாலைகளின் உயர்மட்ட அதிகாரிகள் சாய்ந்தமருது கலாச்சார உத்தியோகத்தர் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


No comments: