News Just In

11/20/2022 04:24:00 PM

அமைச்சர்களுக்கு அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு




அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்காக பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் போது குறித்த பாதுகாப்பு வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, அமைச்சர்களின் வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள எரிபொருளையே பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பிற்கும் வழங்குமாறு கோருவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொலிஸ் திணைக்களம் இதுவரையில் ஏற்க வேண்டிய பாரிய எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், திறைசேரி அதிகாரிகளுக்கும் உரிய தீர்மானம் குறித்து அறிவிக்க வேண்டியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், முன்னாள் ஆளுநர்கள் மற்றும் பல ஓய்வுபெற்ற அரச உயர் மட்ட அதிகாரிகள் இன்னும் பொலிஸ் பாதுகாப்பைப் பயன்படுத்தி வருவதாகவும், அவர்களுக்கும் பொலிஸாரால் எரிபொருளைச் செலவழிக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனால் 13 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 20 முன்னாள் ஆளுநர்கள், 6 முன்னாள் முதலமைச்சர்கள், 29 பௌத்த பிக்குகள் ஆகியோருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கி வருகின்றன. சுமார் 250 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணத்திற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை அழைத்துச் சென்றால் அவர்களுக்குத் தேவையான விமானப் பயணச்சீட்டுகள் உட்பட அனைத்துச் செலவுகளையும் சம்பந்தப்பட்ட அமைச்சு ஏற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நீதிபதிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், அந்த வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் நீதி அமைச்சு தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

No comments: