News Just In

10/24/2022 07:28:00 AM

இன்று தீபாவளி பண்டிகையினை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்! - VTN செய்திக் குழுமம்

உலக வாழ் இந்து மக்களுடன் இணைந்து இலங்கை வாழ் இந்து மக்களும் இன்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும்.

தீபம் என்பது விளக்கையும் ஆவளி என்பது வரிசையையும் குறிப்பதால் தீபாவளி என்பது தீபங்களை வரிசையாக வைத்து இறைவனை வழிபடுதல் என்று பொருளாகும். அறிவொளியின் மூலம் அஞ்ஞான இருள் நீக்கி இறைவனை அடைதல் என்பது தீபாவளிப் பண்டிகையின் தத்துவமாகும்.

தீபாவளி தினத்தன்று இந்துக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து கோயில் சென்று இறைவனை வழிபடுவர். உற்றார் உறவினருக்கு விருந்து படைத்து மகிழ்வதும் தீபாவளிப் பண்டிகையின் சிறப்பம்சமாகும்.

தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள். தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அழித்ததால் உருவானது என்கின்றன இந்துப் புராணங்கள்.

நராகாசுரன் கதையில் இடம்பெறும் நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன். அசுரவதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுரசுபாவம் இயல்பாக அமைந்துவிட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும் துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது. தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்ததை அறிந்த அவனை மகாவிஷ்ணு அழிக்க நினைத்தார். அவன் பூமி தாய்க்கு பிறந்தவன் என்பதால் தன் தாயை தவிர வேறு யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றிருந்தான்.

எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தான். போரில் அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது.

அவரிடம் அம்மா நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

உலகெங்கும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் VTN செய்திக் குழுமத்தின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

No comments: