News Just In

9/24/2022 06:31:00 PM

நடு வீதியில் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்!

அனுராதபுரம் மிகிந்தலை கல்லாட்சிய காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் வீதியில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளதாக மிகிந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான காவல்துறை உத்தியோகத்தர் மிகிந்தலைக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கும் போது திருகோணமலை வீதியில் கருவலகஸ்வெவ விகாரைக்கு எதிரில் உள்ள கடை ஒன்றுக்கு செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், காவல்துறை உத்தியோகத்தரை வீதியில் தள்ளி கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதன் போது, அருகில் இருந்த உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் தடுக்க முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை உத்தியோகத்தர் சிறிலங்கா காவல்துறை திணைக்களம் வழங்கும் நீல நிற ரி-சேர்ட் மற்றும் காக்கி காற்சட்டையை அணிந்திருந்தார்.

ஏதோ ஒரு காரணத்திற்காக இரண்டு பேர் நீண்ட நேரமாக காவல்துறை உத்தியோகத்தரைத் தாக்கியதாக அதனை காணொளியில் பதிவு செய்த ஒருவர் கூறியுள்ளார். தாக்குதல் நடத்திய நபர்கள் போதைப் பொருளை பயன்படுத்தும் நபர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மிகிந்தலை காவல் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு காவல்துறையினரை அனுப்பியுள்ளார். காவல்துறையினர் அங்கு சென்ற போது, சம்பவம் முடிந்து, தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து ஏற்கனவே சென்று விட்டனர்.

மிகிந்தலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தருக்கு அறிவித்திருந்த போதிலும் அவர் முறைப்பாடு செய்ய காவல் நிலையத்திற்கு வரவில்லை என மிகிந்தலை காவல் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை நடு வீதியில் வைத்து மோசமாக தாக்கியமை பாரதூரமான குற்றம் என்பதால், துரிதமாக சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக மிகிந்தலை காவல் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: