News Just In

5/17/2022 01:16:00 PM

நாளாந்தம் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை !



நாளாந்தம் 80 ஆயிரம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளை முதல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

3,700 மெட்றிக் தொன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பலொன்று இன்றைய தினம் இலங்கை வந்துள்ளதுடன், 3,600 மெட்றிக் தொன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பலொன்று நாளை மறுதினமும் (19) இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அதற்கான பணத்தை செலுத்துவதற்கு முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள 100 மில்லியன் டொலர் தொகையையும் பயன்படுத்தி அடுத்த வாரத்திற்குள் மேலும் சில சமையல் எரிவாயு தாங்கிய கப்பல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்த வாரமளவில் சமையல் எரிவாயு தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக லாப் கேஸ் நிறுவனத் தலைவர் டபிள்யூ.எச்.கே. வேகபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments: