News Just In

3/22/2022 02:51:00 PM

கல்முனையன்ஸ் போரமினால் குடிநீர் இணைப்பு வழங்கிவைப்பு!


எம்.என்.எம். அப்ராஸ் 
“கல்முனை பிராந்திய மக்களின் அடிப்படை தேவைகளில் தன்னிறைவடைதல்” எனும் கல்முனையன்ஸ் போரமின் இலக்கினை அடையும் முகமாக பல்வேறுபட்ட செயற்றிட்டங்கள் போரமினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கல்முனையிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீர் இணைப்பினை கொண்டுசேர்க்கும் நோக்கில் கடந்த 2017ம் ஆண்டு கல்முனையன்ஸ் போரமினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட “2020இற்குள் யாவருக்கும் சுத்தமான குடிநீர்” எனும் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரையிலும் சுமார் 120 பயனாளிக்குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிவைக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட மேலும் 21 பயனாளிக் குடும்பங்களுக்கான குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வானது கல்முனையன்ஸ் போரமினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இக்பால் கழக கேற்போர் கூடத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இதன்போது கலந்துகொண்ட பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்புக்கான கோவைகள் கையளிக்கப்பட்டதோடு இத்திட்டத்தின் நோக்கம், எதிர்பார்க்கப்படும் சமூக அடைவுமட்டம் போன்றவை குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

கடந்த 2016ம் ஆண்டு கல்முனையன்ஸ் போரமினால் முன்னெடுக்கப்பட்ட கல்முனைக்கான கல்வி, சமூக, பொருளாதார தனிநபர் தகவல் திரட்டின் மூலம் இணங்காணப்பட்ட குடும்பங்களே இச்செயற்றிட்டத்திற்கான பயனாளிகளாக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments: