News Just In

3/22/2022 02:39:00 PM

அமைச்சு பதவிக்காக பேரம் பேசும் ஆளும் தரப்பே மலையகத்தில் உள்ளது – வேலு குமார்!


“மலையக மக்கள் பட்டினியில் வாடும் நிலைமையிலும், அமைச்சு பதவிக்காக பேரம் பேசும் ஆளும் தரப்பே இன்று மலையகத்தில் உள்ளது.” கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

கட்சி தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் நீண்ட போலின் வரிசையில் பொருட்களுக்காக நிற்கும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

பொருட்களுக்கான விலைகள் தொடர்பாக எந்தவித கட்டுப்பாடும் அற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் வைப்பதே, பொருட்களுக்கான விலை என்ற நிலைமை தோன்றியுள்ளது. இந் நெருக்கடியான சூழ்நிலையில் மலையக தோட்ட தொழிலாளர்களுக்காக முன்னிற்க வேண்டியவர்கள், மலையக மக்கள் பட்டினியில் வாடும் நிலைமையிலும், அமைச்சு பதவிக்காக பேரம் பேசுபவர்களாகவே உள்ளனர்.

இன்றைய அரசாங்கத்தின் ஆரம்பம் முதலே, மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு, அடிக்கு மேல் அடி விழுந்து வருகின்றது. தோட்ட நிர்வாகங்களின் அதிகார துஸ்பிரயோகம் என்றும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது. தேவையான நாட்கள் வேலை வழங்குவதில்லை.

திட்டமிட்டு வேலை நாட்களை குறைப்பது, வேலை செய்ய வேண்டிய அளவை அதிகரிப்பது, என்பன வழமையான பிரச்சினையாக மாறியுள்ளது. ரூபா ஆயிரம் நாட்க்கூலிக்கான தீர்வு இல்லை. வருமானம் நாளுக்கு நாள் குறைந்தே வருகின்றது. இச்சூழலில் மக்கள் ஒரு வேளை உணவையாவது உட்க்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று மலையக மக்கள் நாளாந்தம் அதிகம் பயன்படுத்தும் கோதுமை மாவிற்கும், மண்ணெண்ணெய்க்கும் பாரிய தட்டுப்பாடு மலையக தோட்ட பிரதேசங்கள் எங்கும் நிலவுகின்றது. பொருட்க்களை வாங்க போலின்களுக்கு போவதா? இல்லை, தொழிலுக்கு போவதா என திண்டாடும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலைமைக்கு ஆளும் தரப்பில் இருந்தால் தான் அனைத்தையும் சாதிக்கலாம் என கூறி, எமது மக்களின் வாக்குகளை பெற்றவர்கள் பொறுப்பு கூற வேண்டும். ஆனால் மக்களின் இந்நிலைமை தொடர்பாக எந்த வித அக்கறையும் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. எமது மக்களின் பிரச்சினைகளை கூறி, பேரம் பேசி, மக்களை காப்பாற்ற வேண்டியவர்கள், இன்று மக்களை நாடு ரோட்டில் விட்டுவிட்டு அமைச்சு பதவிக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நிலை காண முடிகின்றது.

மக்கள் இந்த அரசாங்கத்தையே விரட்டி அடிக்க பார்த்துக்கொன்டிருக்க்கும் நிலையில், மக்களை மறந்து அமைச்சு பதவிக்காக அலைபவர்களுக்கு மக்கள் விரைவிலேயே பதில் கொடுப்பார்கள்.”என தெரிவித்தார்.

No comments: