News Just In

3/13/2022 06:41:00 AM

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று  (12)  சனிக்கிழமை இடம்பெற்றது.

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களது ஒருங்கிணைப்பில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்களது தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் மண்டபத்தில் இன்று காலை மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

நேற்றும் இன்றுமாக இரண்டு நாட்களில் இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள பொதுப்பட்டமளிப்பு விழாவின்போது இம்முறை 1958 உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரி மாணவர்களுக்கும், பட்டப்பின் தகைமை பெறுபவர்களுக்கும், கௌரவப் பட்டம் பெறுபவர்களும் தமக்கான பட்டத்தினை பெறவுள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பீ.உடவத்த அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

இம்முறை கிழக்குப் பல்கலைக்கழகத்தால் இப்பல்கலைக்கழகக்தின் காலஞ்சென்ற முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் அவர்களின் சேவையினை நினைவு கூர்ந்து கௌரவ விஞ்ஞான
கலாநிதிப்பட்டமும் மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளரும் சமூகவியலாளருமான வெல்லவூர்க்கோபால் என்றழைக்கப்படும் தேசிய கலைஞர் சீனித்தம்பி கோபாலசிங்கம் அவர்களின் சேவையினைப் பாராட்டி கௌரவ முது இலக்கியமாணிப் பட்டமும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை மிகவும் முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது.

கிழக்குப்பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாக 1958 மாணவர்களுக்கான பொதுப்பட்டமளிப்பு நிகழ்வு நடாத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க அதிதிகள் மற்றும் பட்டம் பெறவுள்ள மாணவர்களுக்கும் வரவேற்பளிக்கப்பட்தனைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன் முதல் நாள் பட்டமளிப்பு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்களினால் பட்டதாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இம்முறை இடம்பெறும் குறித்த பட்டமளிப்பு விழாவில் வணிக நிர்வாகத்தில் முதுமாணி (MBA), முதுகலைமாணி (MA), முதுகல்விமாணி(MEd), அபிவிருத்திப் பொருளியலில் முதுமாணி (MDE) ஆகிய 133 பட்டப்பின் தகமைகளுக்கான பட்டங்களும், 2 கௌரவப் பட்டங்களும் முதலாம் நாள் முதலாவது அமர்வில் வழங்கப்பட்டிருந்தது.

ஏனைய இளமாணிப் பட்டங்களுக்காக 2வது அமர்வில் 408 பட்டதாரி மாணவர்களும், 3வது அமர்வில் 340 பட்டதாரி மாணவர்களும், இரண்டாம் நாள் நிகழ்வில் முதலாவது அமர்வில் 330 பட்டதாரி மாணவர்களும், 2வது அமர்வில் 360 பட்டதாரி மாணவர்களும், 3வது அமர்வில் 385 பட்டதாரி மாணவர்களும் பட்டமளித்து கௌரவிக்கப்படவுள்ளனர்.

இப் பொதுப்பட்டமளிப்பு விழாவின் முதல் நாள் நிகழ்வில் பட்டமளிப்பு விழா குழு தலைவர் பேராசிரியம் எம்.சிதம்பரேசன், பீடாதிபதிகள், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.பகீரதன், சிரேஸ்ட உதவிப் பதிவாளர் (கல்விப் பிரிவு) திருமதி.நிசாந்தினி நிருமிதன், செனட் உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், பட்டதாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களின் பெற்றோர்கள் என பெருமளவிலானோர் இதன்போது கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










No comments: