News Just In

1/16/2022 06:11:00 PM

யானை தூக்கி வீசியதில் இளைஞன் படுகாயம்!

யானை தூக்கி வீசியதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை தமிழ், பிரதான வீதியில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடலுக்கு செல்வதற்காக துவிச்சக்கர வண்டியில் குறித்த வீதியால் சென்று கொண்டிருந்த சுங்கான்கேணி, எழுச்சி கிராமத்தை சேர்ந்த 23 வயதுடைய கே.சதீஸ்கரன் எனும் இளைஞன் மீதே காட்டு யானை இவ்வாறு தாக்கியுள்ளது.

குறித்த இளைஞனை யானை தூக்கி வீசியதில் இளைஞனின் கை மற்றும் நெஞ்சுப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இளைஞன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், மக்கள் பெரிதும் அச்சத்துடன் வசித்து வருவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(எச்.எம்.எம்.பர்ஸான்)






No comments: