நாடாளுமன்றம் இன்று காலை ஆரம்பமாகி சிறிது நேரத்தில் அரசாங்கத்திற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.
முன்னாள் ஜனாதிபதிக்கு பதிலளிக்க வேண்டும் எனக் கூறி ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinge), சபாநாயகரிடம் 7 நிமிட நேரத்தை பெற்றுக்கொண்டார்.
தான் கூறிய அவதூறு ஒன்றை கேட்டு, அமைச்சர் அளுத்கமகே உரை ஒன்றை நிகழ்த்தியதாக மைத்திரிபால சிறிசேன நேற்று கூறியிருந்தமைக்கு பதிலளித்து ரொஷான் ரணசிங்க உரையாற்றினார்.
எனக்கு அவதூறு பழக்கம் கிடையாது. அவர்களுக்கே அவதூறு கூறும் பழக்கம் இருக்கின்றது. நான் எதனை கூறினாலும் அதனை நேரிடையாக கூறுவேன் என ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தான் காலையில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து, மாலையில் அவர்களை ஒன்று கூட்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளையை அமைப்பதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறியதாகவும் ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அவதூறை கேட்டே அவர் அப்படி கூறியதாகவும் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) நேற்று கூறியிருந்தார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ரொஷான் ரணசிங்க, பொலன்நறுவையில் வீழ்ச்சியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேலைத்திட்டங்களை மறு உருவாக்கம் செய்வதற்காக சிறிசேன, விவசாயிகளின் பிரச்சினை மற்றும் பராக்கிரம சமுத்திரத்தின் நடபாதை பிரச்சினை பிடித்துக்கொண்டார்.
சேதனப் பசளை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பது அமைச்சரவை எடுத்த கூட்டு தீர்மானம். அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் மகிந்த அமரவீர போன்றவர்களும் இருக்கின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இருக்கின்றது. அந்த கட்சியை சேர்ந்த ஓரிருவர் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால், அரசாங்கத்திற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண(Lasantha Alagiyawanna), முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இருக்கும் போது இந்த கதையை கூறியிருந்தால், அது நெறிமுறையாக இருந்திருக்கும். இப்படியான கதையை கூற போவதாக முன்னதாகவே கூறியிருந்தால், மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பார். ஆளும் கட்சியினர் தொடர்ந்தும் மைத்திரிபால சிறிசேன மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அப்போது ஆசனத்தில் இருந்து எழுந்த ரொஷான் ரணசிங்க, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தல் அங்கம் வகிக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள் குறித்து நன்று தெரியும் எனவும் அவையில் இருக்கும் நேரத்தில் தன்னை பற்றி கூறுவதை நெறிமுறையற்றது என்பதை அவர் அறிவார் எனவும் கூறியுள்ளார்.
No comments: