(நூருல் ஹுதா உமர்)
அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் முழுமையான விபரங்கள் அடங்கிய அக்கரைப்பற்று பிரத்யோக தகவல் திரட்டு செயலி மற்றும் அதனுடன் இணைந்த தரவுத்தள விபரத்திரட்டு நூல் ஆகியவற்றின் அறிமுக நிகழ்வுகள் நேற்று (16) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க். எம்.எஸ்.எம்.றஸான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு செயலியினை (App) உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து ஆரம்பித்து வைத்தார். 14,776 குடும்பங்களும் சுமார் 47,510 சனத் தொகையும் கொண்ட அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் பொதுமக்களுக்கு அலுவலக நிர்வாக செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்கோடும், தாமதமற்ற வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்கும் பொருட்டும் இத்தரவுத்தள செயலி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அக்கரைப்பற்று குடியிருப்பாளர்களின் முழுமையான விபரங்கள் உள்ளடக்கப்பட்ட ஆவணத்திரட்டு நூலும் நாடாளுமன்ற உறுப்பினர்.ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் முன்னிலையில் இந்நிகழ்வின் போது வெளியிட்டு வைக்கப்பட்டு,கிராம நிலதாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி , அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. ராசீக், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எம்.தமீம், நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜே.எம். வஃஸீர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments: