(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணிக்கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துக்கோராள தலைமையில் இன்று(31) நடைபெற்றது.
தற்போதைய நிலையில் கொவிட் வைரசை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்படல் வேண்டும். இன்று மாவட்டத்தின் கிராமங்களுக்கும் வைரஸ் பரவியுள்ளது. கிராமங்களில் நடைபெறுகின்ற சில வைபவங்களாலே இவ்வைரஸ் பரவியுள்ளது.எனவே மக்களை அறிவுறுத்தும் செயற்பாடுகளை தற்போது மேற்கொள்ளும் செயற்பாடுகளைவிட கூடியளவில் மேற்கொள்ளுமாறு இதன்போது இக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மாவட்டத்தில் உள்ள கிராமியக்குழுக்குழுக்களை மேலும் வலுப்படுத்தி வைரஸ் பரவாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும். இக்குழுவை வலுப்படுத்துவதன் மூலம் கிராமங்களில் வைரஸ் பரவாமல் மக்களை பாதுகாக்க முடியும். மக்கள் இக்காலப்பகுதியை மிக அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்படல் வேண்டும். உரிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உரிய தரப்பினரை ஒன்றினைத்து கொவிட் வைரசை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
மக்கள் அநாவசியமாக நடமாடுவதை தவிர்த்தல் இன்றியமையாது. மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதானது ஆபத்தை நோக்கி பயணிக்க ஏதுவாக அமையும். எனவே தற்போதைய அபாயகரநிலையை கருத்திற்கொண்டு ஒவ்வொருவரும் செயற்படுமாறு இதன்போது அரசாங்க அதிபர் வேண்டிக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பி.ஆர்.ஜயரத்ன, பிரதேச செயலாளர்கள், முப்படை, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
No comments: