News Just In

1/13/2020 01:06:00 PM

இவைதானா தேசிய நல்லிணக்க அடையாளங்கள்!?-ஸ்ரீநேசன் எம்.பி

கடந்த அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தின் ஓர் அடையாளப்படுத்தலாக தமிழர்களின், உழவர்களின் தைப்பொங்கலை தேசிய ரீதியில் முக்கியத்துவப்படுத்தியும், கௌரவப்படுத்தியும் மேற்கொண்டமை முற்போக்கான கருமமாக தமிழ் மக்களால் நோக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன் அவர்கள் இன்று (13) அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது குறிப்பிட்டார் .

அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வருடம் அவ்வாறு தேசிய ரீதியாக தைப்பொங்கலை மேற்கொள்வதில்லையென்றும், அவ்வாறு செய்வதால் வீண் செலவுகள் ஏற்படுவதாகவும் ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸநாயக்க தெரிவித்ததாக பத்திரிக்கை மூலமாக அறிந்ததாக குறிப்பிட்டார்.

மேலும், சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படமாட்டாது. அக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்படும் என்று அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கூறியதையும் நினைவுபடுத்தினார்.

இப்படியான செயற்பாடுகள் இந்நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்களின் மனங்களைக் காயப்படுத்துவதாகவே அமையும். ஏற்கனவே தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, தமிழ்க்கைதிகள் விடுவிக்கப்படாமை தொடர்பாக மனக்காயப்பட்டுள்ளார்கள். மேலும் மேலும் தமிழர்களின் மனங்களைக் காயப்படுத்துவது தேசிய நல்லிணக்கத்தைத் திட்டமிட்டு மறுப்பதாகவே அமையும்.

'பேரினமே இந்நாட்டின் ஓரினம்', 'இந்நாடு சிங்கள பௌத்தநாடு' போன்ற பேரினவாத வாயாடல்களை ஏனைய தேசிய இனங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்ற வினாவையும் பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்தார்.

முற்போக்கான சிந்தனைகள் பேரினவாதத்தால் மூழ்கடிக்கப்படுவதை வாய்வீச்சு அரசியல்வாதிகள் கண்டும் காணாமல் வாய்மூடிகளாக இருப்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். இவ்வரசாங்கம் பல்லின மக்களின் அரசாங்கமாகச் செயற்பட வேண்டும் என்பதே ஏனைய தேசிய இனங்களின் விருப்பமாகும்.

அரசாங்கத்தின் ஓரின மனப்பாங்கு பல்லின மனப்பாங்காக மாற்றமடைய வேண்டும். இல்லையேல் தேசிய நல்லிணக்கம் வெறும் பேச்சில் மட்டுமே இருக்கும் எனக் குறிப்பிட்டதுடன், புதிய அரசாங்கத்தால் முன்னைய அரசாங்கத்தினை விட இரட்டிப்பான சுதந்திரம் இருக்குமென மட்டக்களப்புத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். மேற்படி விடயங்களும் இரட்டிப்பான சுதந்திரங்களில் அடங்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

No comments: