News Just In

12/28/2019 08:52:00 AM

இலங்கையில் வாழை நார் மூலமான ஆடைத் தயாரிப்பு ஆரம்பம்!

இலங்கையில் புதிய ஆடைத்தொழிற்துறை அறிமுகப்படுத்தப்பட்டு வாழை நாரில் ஆடைத் தயாரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கைத்தொழில் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் இலங்கை நெசவு மற்றும் ஆடைத்தொழிற்துறை நிறுவனங்கள் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இவர்களது நீண்ட கால ஆய்விற்கு பின்னர் வாழை நாரை நூலாக பயன்படுத்தி ஆடை தயாரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட பல்வேறு ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கைக்கு வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கான புதிய கைத்தொழிலாக விரிவுபடுத்தும் ஆற்றல் இருப்பதாக இதன்போது குறிப்பிடப்பட்டது.

இலங்கை நெசவு மற்றும் ஆடைத் தொழில்துறையினரின் தலைவர் எம்.ஏ.தாயுதீன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் தர்ம ஸ்ரீ விக்கிரமசிங்க இலங்கை நெசவு மற்றும் ஆடைத்தொழிற்துறை நிறுவனத்தின் தொழில்நுட்பவியலாளர் திருமதி.எ.டி.எஸ்.ஐ.முந்தாஸ் ஆகியோர் இந்த திட்டம் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கையில் பெருமளவில் பயன்படுத்தப்படும் பழவகைகளில் வாழைப்பழமும் ஒன்றாகும். வாழைக்குலை வெட்டப்பட்ட பின்னர் வாழை மரம் அழிக்கப்படுகின்றது. இதனை அழிப்பதற்கும். அகற்றுவதற்கும் பெரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் வாழை மரத்துக்காக விவசாயிகளுக்கு பணத்தை பெற்றக்கொள்ள முடியும். தற்பொழுது இலங்கையில் 25 வகையான வாழை மரங்கள் உண்டு. சுமார் 53 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் இது உற்பத்தி செய்யப்படுகின்றது. வாழை நார் ஆடைத் தயாரிப்பு திட்டத்தின் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருடாந்த வருமானமாக எதிர்பார்க்க முடியும் என்று இலங்கை நெசவு மற்றும் ஆடைத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

படிப்படியாக செயற்கை தயாரிப்பு ஆடையில் இருந்து விலகிச் செல்லும் நவீன உலகத்துக்கு இந்த புதிய தயாரிப்பு பயனுள்ளதாக அமையும் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை நெசவு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சிறுவர்களுக்கான ஆடைகளுக்கு தரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரத்தைக்கொண்ட விற்பனை அடையாளத்துடனான ஆடைகளை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நுகர்வோர் ஆர்வம் செலுத்தி வருவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: