மட்டக்களப்பு மாநகரசபை, கைத்தொழில் திணைக்களம், நியு ஏரோ தொண்டு நிறுவனம் இணைந்து தொழில் வாய்ப்பற்றிருக்கும் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த மட்டக்களப்பு மாநகர பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியில் ஆரம்பித்த கைத்தறி தொழிற்பயிற்சி நிலையமானது மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தனது உரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் தமது குடும்ப வறுமை காரணமாக தமக்கென தொழிலொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றார்கள். இவர்கள்அச்சமற்று தொழில் புரியவும் எதிர்காலத்தில் நிலையான வருமானத்தினைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சுய தொழிலினை அவர்களுக்கு வழங்க வேண்டியது சமூகப் பொறுப்புமிக்கவர்களின் பிரதான கடமையாகும். இதன் காரணமாக கைத்தொழில் திணைக்களம், நியு ஏரோ பெண்கள் அபிவிருத்தி நிறுவனம், ஆதித்தியா கைத்தறி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்படி கைத்தறி பயிற்சி மையத்தினையும் அத்தோடு இணைந்த தொழில் வாய்ப்பு நிறுவனத்தினையும் ஆரம்பித்துள்ளோம்.
மேலும் இத்தகைய கைத்தறி பயிற்சி நிலையத்தின் ஊடாக எமது சமூகத்தினை பொருளாதார ரீதியாக மேம்படுத்தி, தமிழர்களுக்கென தனித்துவமான வியாபார நாமங்களையும் உற்பத்திகளையும் இவ் வர்த்தக உலகில் முதன்மைப்படுத்த முடியும். மேலும் தொழில்களற்று இருக்கின்ற எமது சமுதாயத்தினரை சிறந்த தொழில் முன்னேற்ற நகர்விற்கு கொண்டு செல்லும். இங்கு போதியளவான பாதுகாப்பும் உரிய கண்காணிப்பும் உள்ளது. இதற்கான கொடுப்பனவுகளை கைத்தொழிற் திணைக்களம் மற்றும் நியு ஏரோ அமைப்பினாலும் வழங்கப்படுமென தெளிவுபடுத்தினார்.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாவட்ட கைத்தொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், ஆதித்தியா கைத்தறி நிறுவனத்தின் பணிப்பாளர் சுதாகரன், நியு ஏரோ, எமது சமுகம் ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கைத்தறி பயிற்சிநெறியினை வழங்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
No comments: