வவுனியா-பம்பைமடு பெரியகட்டு பகுதியில் வெள்ளிக்கிழமை (18) இரவு இடம்பெற்ற விபத்தில் பெரியகட்டுபகுதியை சேர்ந்த 21 வயதுடைய, ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பூவரசங்குளம் பெரியகட்டு பகுதியில் உழவு இயந்திரமொன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர். உழவு இயந்திரத்தை வீதியில் திருப்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மதகுடன் மோதி குடைசாய்ந்துள்ளது. இவ் விபத்தில் இவருடன் பயணம் செய்த கணவன் தூக்கி வீசப்பட்டதுடன் குறித்த பெண் உழவு இயந்திரத்தின் கீழ்பகுதியில் அகப்பட்டுக்கொண்டார்.
அங்கிருந்தவர்கள் இவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கணவன் சிறு காயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிழந்த பெண்ணே உழவு இயந்திரத்தை செலுத்திச் சென்றதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பூவரசங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: