
கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை வழக்கில் கைதான இஷாரா செவ்வந்தியை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி DNA மற்றும் புகைப்பட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் நேற்று இதனை தெரிவித்துள்ளது.
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றில் தகவல்களை முன்வைத்த கொழும்பு குற்றப் பிரிவினர், கடந்த 17ஆம் திகதி இஷாரா செவ்வந்தி அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் முக அடையாள பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர்.
இதன்போது DNA மாதிரிகள், புகைப்படப் பதிவுகள் மற்றும் காணொளி காட்சிகளும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த சம்பவத்தின் 32ஆவது சந்தேகநபர்களான பட்டுவத்தையைச் சேர்ந்த சாமர மற்றும் கம்பஹா ஒஸ்மான் ஆகியோருக்கான தடுப்பு காவல் உத்தரவு 13ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
இதனால், அவர்களுக்கு மேலும் 90 நாட்களுக்கு தடுப்பு உத்தரவு பெற்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணம் ஊடாக மன்னாருக்கு தப்பிச் செல்ல உதவியதாக கூறப்படும் 41 மற்றும் 42ஆவது சந்தேகநபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றப்பிரிவினர் தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
No comments: