
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அடையாள சத்தியாகிரகப் போராட்டம் இடம்பெற்றது.
சிறைச்சாலை ஆணையாளரே சந்திரகாந்தனை தகுதியான சிறைச்சாலைக்கு மாற்றுங்கள், கைதிகளும் மனிதர்களே, சந்திரகாந்தனின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தீர்வு கொடுங்கள், சந்திரகாந்தனுக்கு தடுப்பு காவல் கைதிக்கான வசதிகளை வழங்க வேண்டும், இலங்கை நீதித்துறையை மதிக்கின்றோம் உண்ணாவிரத போராட்டத்திற்கு தீர்வு கொடுக்கவும் என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கருப்புப்பட்டி அணிந்து அமர்ந்தவாறும் அமைதியான முறையில் தங்களது அடையாள சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அடையாள சத்யாக்கிரக போராட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில
சிறையில் சந்திரகாந்தனின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அவருக்கு உரிய முறையில் சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளும் வழங்கப்படவில்லை. எனவே சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளை சரி, வழங்க வேண்டும் எனவும், வேறு சிறைக்கு அவரை மாற்றி அவருக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் எனவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளை தாங்கள் வரவேற்பதாகவும் சட்டம் தன் கடமையை சரியாக செய்ய வேண்டும் எனவும் சந்திரகாந்தன் குற்றம் செய்திருந்தால் அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் எனவும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.


No comments: