News Just In

4/01/2026 06:34:00 PM

சம்மாந்துறையில் வயல்வெளியில் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

சம்மாந்துறையில் வயல்வெளியில் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை அல்-அமீர் பாடசாலையின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம், சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (01) காலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், வயல்வெளி பகுதியில் சடலம் ஒன்று காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட போது, சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இருந்ததாகவும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் உயிரிழந்தவர் சம்மாந்துறை சாலி வீதியைச் சேர்ந்த, சுமார் 50 வயதுடைய ஆதம்பாவா றியால் என்பவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மரணத்திற்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவராத நிலையில், சட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

No comments: