
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக இம்ரான் எம். பி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப் படுவதாக சமீபத்தில் என்னைச் சந்தித்த திருகோணமலை மாவட்ட ஆசிரியர் தொழிற் சங்கங்கள் சுட்டிக் காட்டியுள்ளன என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்
கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மாகாணக் கல்வி அமைச்சு ஆளணி பகிர்வு, வளப் பகிர்வு என்பவற்றில் திருகோணமலை மாவட்டத்தைப் புறக்கணிப்பதாக ஒரு குற்றச்சாட்டை தொழிற்சங்கத்தினர் முன் வைத்தனர்.
கிழக்கு மாகாணத்தில் விஞ்ஞானப் பாட ஆசிரியர் பற்றாக்குறை இல்லை எனக் கல்வி அமைச்சு நிரலில் தெரிவித்தாலும், திருகோணமலை மாவட்ட பாடசாலையில் அதே விஞ்ஞானப் பாட ஆசிரியர் பற்றாக்குறையைக் குறிப்பிடப்படுகிறது.
இதனால், தவறான புள்ளிவிபரங்களை வழங்குவதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
மேலும், திருகோணமலை மாவட்ட ஆசிரியர்கள் மற்ற மாகாணங்களுக்கு நியமிக்கப்படுவதால், அப்பிரதேச பாடசாலைகளில் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்துள்ளது.
கடந்த க.பொ.த (சா.த) பரீட்சைகளின் அடிப்படையில், திருகோணமலை மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களில் 4 வலயங்கள் மிகவும் கீழ் நிலை பெற்றுள்ளதையும், நாட்டில் 100 கல்வி வலயங்களில் திருகோணமலை 89-ஆம் இடத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்தி, உண்மை விவரங்களை அறிய வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments: