News Just In

3/03/2025 01:08:00 PM

சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் அரசியல்வாதிகளின் சொத்தல்ல : அரசியல்வாதியின் சிபாரிசில் தந்த பதவி வேண்டாம் - ராஜினாமா செய்த உறுப்பினர் !

சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் அரசியல்வாதிகளின் சொத்தல்ல : அரசியல்வாதியின் சிபாரிசில் தந்த பதவி வேண்டாம் - ராஜினாமா செய்த உறுப்பினர் !



நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு இடைக்கால நிர்வாக மரைக்காயர் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் சிபாரிசின் பெயரில் வழங்கப்பட்ட மரைக்காயர் பதவியை இராஜினாமா செய்வதாக ஓய்வு பெற்ற கூட்டுறவு பொது முகாமையாளர் வை. அஹமட் லெவ்வை தெரிவித்துள்ளார்.

தனது ராஜினாமா குறித்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கும் பிரதிகள் அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா வின் சிபாரிசின் மூலம் இடைக்கால நிர்வாக சபை 42 பேர் கொண்ட குழுவாக தெரிவு செய்யப்பட்டது. அதில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட ஓய்வு பெற்ற கூட்டுறவு பொது முகாமையாளர் வை. அஹமட் லெவ்வை என்பவர் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள ராஜினாமா கடிதத்தில் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு இடைக்கால நிர்வாக மரைக்காயர் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் சிபாரிசின் பேரில் எனக்கு வழங்கப்பட்ட மரைக்காயர் பதவியை ராஜினாமா செய்கின்றேன். மேற்படி பள்ளிவாசலுக்கு இடைக்கால பள்ளிவாசல் நிர்வாக சபையை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அபூபக்கர் அவர்கள் தனது பெயரையும் தெரிவு செய்து நியமனம் வழங்கியமைக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, அரசியல்வாதியின் சிபாரிசின் பேரில் பள்ளிவாசல் இடைக்கால நிர்வாக சபையில் தொடர்ந்தும் இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பொதுமக்களின் ஒரு சொத்து அரசியல்வாதிகளின் சொத்தல்ல. பிரதான ஜும்ஆ பள்ளிவாசலுக்கு கீழ் இயங்கும் 14 உப பள்ளிவாசல்களின் மஹல்லாவாசிகளை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நிர்வாக சபை ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் செய்தது எனக்கும் பெரும்பாலான பொதுமக்களுக்கும் மனவேதனையை உண்டாக்கியுள்ளது. பதவியை ராஜினாமா செய்வதற்கு என்னை மன்னிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்

No comments: