விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான் , கருணா பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர் என சமூக செயற்பாட்டாளரும் சுயேட்சைக்குழுவாக தேர்தலில் போட்டியிடும் விமலசேன லவக்குமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - கோறளைப்பற்று பிரதேச சபையில் சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதற்காக நேற்று (19) பழைய கச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “வியாழேந்திரன் பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கான கூட்டு.
பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தொடர்பாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தொடர்பாகவும் பல விமர்சனங்கள் உண்டு இவர்கள் எல்லாம் மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இந்தமுறை போட்டியிடுகின்றனர்.
எனவே, மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் என்பதுடன் இவர்கள் மக்களின் இருப்புக்களை சுரண்டி எத்தனையோ உயிர்கள் பறித்தவர்கள்.
கடந்த காலத்தில் புலிகள் இருந்த காலத்தில் பிள்ளையானும் கருணாவும் பிரிந்த போது தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
மாவட்டத்திலுள்ள அநேகமானவர்கள் பறிகொடுத்து உறவுகளாக, தாய் தந்தைகளாக, சகோதரர்களாக இருக்கின்றோம் எனவே மக்கள் விழிப்போடு இந்த தேர்தலில் செயற்படவேண்டும்“ என அவர் தெரிவித்துள்ளார்
No comments: