சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக மட்டக்களப்பில் அதிகாரிகளைச் சந்தித்த கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள இடர் பாதிப்புக்கள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்வில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு அமைப்பாளர் எம்.பி.எம். பிர்தௌஸ் உட்பட இடர் முகாமைத்துவப் பிரிவினர், திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலில், வெள்ள இடருக்குப் பின்னரான மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் இடர்;களினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் பொதுமக்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான உணவு, சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பான பயண ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இங்கு நிகழ்வில் கருத்து தெரிவித்த சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விவரங்கள் பெறப்பட்டதும் இழப்பீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
No comments: