News Just In

12/01/2024 07:06:00 PM

சாய்ந்தமருது பிரதேச விளையாட்டுக் கழகங்களின் இரண்டு மில்லியனுக்கும் கூடிய விளையாட்டு உபகரணங்கள் வெள்ளத்தால் சேதம் !

சாய்ந்தமருது பிரதேச விளையாட்டுக் கழகங்களின் இரண்டு மில்லியனுக்கும் கூடிய விளையாட்டு உபகரணங்கள் வெள்ளத்தால் சேதம் 


நூருல் ஹுதா உமர்

அண்மையில் நாட்டை ஸ்தம்பிக்க செய்த வெள்ளம் வடக்கு கிழக்கு மாகாணத்தை அதிகம் சேதமாக்கியது. அதில் அம்பாறை மாவட்ட தாழ்நிலங்கள் வெள்ளத்தில் சிக்கி கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. அதன் ஒரு பகுதியாக சாய்ந்தமருது அஸ்ரப் ஐக்கிய விளையாட்டு மைதானம் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கி குளம் போன்று வெள்ளநீரினாலும், சல்பினியாக்களினாலும் நிறைந்து காட்சியளித்தது.

குறித்த மைதான களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த சாய்ந்தமருது பிரதேச 16 விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டு உபகரணங்கள் வெள்ளத்தில் மூழ்கி பாவனைக்கு பொருத்தமற்றதாக அழிவடைந்துள்ளதுடன் மிகப் பெறுமதி வாய்ந்த கடின பந்து துடுப்பு மட்டைகள் அழிவடைந்து உடையும் அபாயத்தை சந்தித்துள்ளது. மேலும் கடின பந்து விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் ஆடுகள விரிப்பு (மெடின்) வெள்ளத்தில் மூழ்கி பாவனைக்கு பொருத்தமற்றதாக அழிவடைந்துள்ளன. 20 லட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய இந்த விளையாட்டு உபகரணங்களின் பாதிப்பால் சாய்ந்தமருது விளையாட்டுத்துறை அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சாய்ந்தமருது பிரதேச விளையாட்டுக் கழக வீரர்கள், நிர்வாகிகள் வெள்ள நிவாரண பணிகள், அனர்த்த முன்னாயத்த பணிகள், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், கல்முனை மாநகர சபை உட்பட பொறுப்பு வாய்ந்த அரச திணைக்களங்கள் இந்த மைதானத்தை வீரர்கள் பயன்படுத்தும் விதமாக துரிதமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விளையாட்டு அமைச்சு மற்றும் திணைக்களம் என்பன விளையாட்டுக் கழகங்களின் இந்த அவல நிலையை போக்க உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்று விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments: