News Just In

11/08/2024 06:13:00 PM

போலித் தகவலை பரப்பியவருக்கு எதிராக சிறீதரன் சட்ட நடவடிக்கை!

போலித் தகவலை பரப்பியவருக்கு எதிராக சிறீதரன் சட்ட நடவடிக்கை!




முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கியுள்ளதாக, போலிக் கடிதம் ஒன்றுடன் முகநூலில் பிரசாரம் செய்த ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி (Kilinochchi) காவல் நிலையத்தில் இன்றையதினம் (08.11.2024) குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்ததன் பின்னர் சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தலின் அடிப்படையில் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட என்னை, நீதிமன்ற வழக்கினால் இயங்க விடாது தடுத்தவர்களின் மற்றொரு முயற்சியாக, எனது கடிதத் தலைப்பையும், பதவி முத்திரையையும் முறைகேடாகப் பயன்படுத்தி தொழிநுட்ப உதவியோடு போலியான கடிதத்தை தயாரித்து முகநூலில் விசமப் பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

அத்கைய வதந்திகளை பரப்பும் நபரொருவர் மீது இன்றையதினம் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். தொடர்ச்சியான முறைமைகளுக்குட்பட்டு அந்த நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெளியிடப்பட்ட கடிதம் போலியானது என்பதை எண்பிக்க போதுமான ஆதாரங்கள் அந்தக் கடிதத்திலேயே உள்ளன. அறிவிலித்தனமாக செயற்பட்டுவரும் இவர்களை எமது மக்கள் எளிதில் இனங்கண்டு கொள்வார்கள்.

என்னை விசுவாசிக்கும் எனது மக்களுக்கு நான் மீளவும் ஒன்றை வலியுறுத்திக் கூறுகிறேன். இதுவரை காலமும் நான் மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை பெறவோ, அத்தகைய அனுமதி ஒன்றுக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கவோ இல்லை.

அவ்வாறு நான் வழங்கியிருப்பதாக யாராவது கருதினால் ஜனாதிபதி செயலகத்திலோ, மதுவரி திணைக்களத்திலோ உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை வெளிப்படுத்துங்கள். அதைவிடுத்து பிற்போக்குத்தனமான அற்ப அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு உங்களை நீங்களே தரம்தாழ்த்திக் கொள்ளாதீர்கள்“ என தெரிவித்தார்

No comments: